Sunday, February 3, 2008

தில்லியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: புதுச்சேரியில் வழியனுப்பு விழா






பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு ‘இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே’ என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை அடங்கிய மனுவை மத்திய அரசிடம் கையளிக்கின்றனர்.

இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. தோழர்கள் அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 3.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் தில்லி செல்கின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் வீ.பார்த்திபன், மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொறுப்பாளர் மு.முத்துக்கண்ணு, சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் அ.மஞ்சினி, இரா.சுகுமாரன், தனித் தமிழ்க் கழகச் செயலாளர் சீனு.அரிமாப்பாண்டியன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா உட்பட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கலந்துக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.

வழியனுப்பு விழாவின் முடிவில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

No comments: